Friday 7 August 2020

வெரோனாவில் இரு கனவான்கள்

Two Gentlemen of Verona' என்ற இந்தக்கதையின் தலைப்பு ஷேக்ஸ்பியரின் நாடகங்களுன் ஒன்றன் தலைப்பு. அந்தக்கதைக்கும் இதற்கும் சம்பந்தம் தலைப்பில் மட்டும் தான்.
இத்தாலி நாட்டில், ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள வெரோனா என்னும் நகரத்தில் தான் சந்தித்த இரண்டு சிறுவர்களைப் பற்றிய இந்தக்கதையை எழுதியவர் A.J.Cronin. இதுவும் பாடப்புத்தகத்தில் இருந்த கதை தான். இதை வகுப்பில் படித்த போது, மாணவர்கள் உணர்ச்சிக் குவியலாக மாறியதை நான் இன்னும் மறக்கவில்லை. இந்தச்சிறார்களை, 'கனவான்கள்' என்று கதாசிரியர் ஏன் அழைக்கிறார் என்பது கதையைப்படித்து முடித்தால், விளங்கும்.
வெரோனாவில் இரு கனவான்கள்
நாங்கள் ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தின் வழியே காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரண்டு சிறுவர்கள் எங்கள் வண்டியை நிறுத்தினார்கள். அவர்கள் சிறு சிறு கூடைகளில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.
என்னுடைய டிரைவர் சொன்னார், "இவர்களிடம் வாங்காதீர்கள். வெரோனாவுக்குப் போனால், இதை விட மலிவாகக் கிடைக்கும். அதுவுமல்லாது......" என்று பாதியில் நிறுத்தினார்.
கசங்கிய உடைகளுடன், இருந்த அவர்களிடம் வாங்க அவருக்கு விருப்பம் இல்லை. அந்த இருவரில் ஒருவன் ஒரு பழைய ஜெர்ஸியும், காக்கி ட்ராயரும் போட்டுக்கொண்டிருந்தான். இன்னொருவன் தன் ஒல்லியான உடம்பை ஒரு படைவீரனுடைய உடையால் சுற்றியிருந்தான். ஆனாலும், பழுப்பு நிற உடலுடனும், கலைந்த தலைமுடியுடனும், ஆர்வம் நிறைந்த பார்வையுடனும் இருந்த அந்த சிறுவர்கள் ஏதோ விதத்தில் எங்களைக் கவர்ந்தார்கள்.
அவர்களுடன் பேசியதில் அவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்தது. பெரியவன் ஜாக்கோப்போவுக்கு (Jacopo)13 வயது. காரின் கைப்பிடி அளவு உயரமே இருந்த அவனுடைய தம்பி நிக்கோலாவுக்கு (Nicola)12.
அவர்களிடம் இருந்ததிலேயே பெரிய கூடையை, வாங்கிக்கொண்டு, நாங்கள் நகரத்தை நோக்கிப் பயணப்பட்டோம்.
அடுத்த நாள் காலை, நாங்கள் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த போது அருகிருந்த சதுக்கத்தில் அமைந்திருந்த நீரூற்றுக்கு அருகே, அந்தச் சிறுவர்கள் இருவரும் குனிந்த படி, ஷூ பாலிஷ் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களையே சிறிது நேரம் கவனித்தோம். பிறகு, அவர்கள் முன் இருந்த கூட்டம் குறைந்தவுடன், அவர்களிடம் சென்றோம்.
எங்களைப் பார்த்ததும் அவர்கள் எங்களை நட்புடன் வரவேற்றார்கள்.
" நீங்கள் பழ வியாபாரம் செய்வதாக அல்லவோ நினைத்தேன்", என்றேன்.
" நாங்கள் பலவும் செய்கிறோம், ஐயா!" என்று நிக்கோலா பதில் சொன்னான்.
நாங்கள் எங்கள் ஷூக்களை பாலிஷ் செய்து கொள்வோமா என்று, நம்பிக்கையுடன் எங்களைப் பார்த்தான்.
" நாங்கள் இங்கு வரும் பார்வையாளர்களுக்கு நகரத்தைச் சுற்றிக் காண்பிக்கவும் செய்வோம். ஜூலியட்டின் கல்லறை போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம்."
" சரி! அப்படியானால், எங்களைக் கூட்டிச் செல்லுங்கள்!"
நாங்கள் பல இடங்களையும் சுற்றிப் பார்த்த போது அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர்கள் மேல் ஒரு ஆர்வத்தையும் அக்கறையையும் ஏற்படுத்தியது.
அவர்கள் குழந்தைத்தனமாகவும் வெகுளியாகவும் தான் இருந்தார்கள். ஜாக்கொப்போ ஒரு அணிலைப்போலத் துறு துறுவென்றிருந்தான். நிக்கோலாவின் முகத்தில் எப்போதும் ஒரு மனதைக்கவரும் புன்னகை. ஆனாலும் அவர்கள் இருவர் முகத்திலும் அவர்கள் வயதை மீறிய ஒரு முதிர்ச்சி இருந்தது.
அங்கு தங்கியிருந்த அந்த வாரத்தில் நாங்கள் அவர்களை அடிக்கடி சந்தித்தோம். அவர்கள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தார்கள். அமெரிக்கன் சிகரெட் ஒரு பாக்கெட் வேண்டுமா? ஓப்பெரா (Opera) வுக்கு டிக்கெட் வேண்டுமா? ஒரு நல்ல ரெஸ்டாரண்டின் பெயர் தெரிய வேண்டுமா? எதுவானாலும் அவர்களைக்கேட்டால் போதும்.
எந்த வேலையையும் செய்வதில் அவர்கள் காட்டிய விருப்பமும், ஈடுபாடும் எங்களை மிகவும் கவர்ந்தது.
அந்தக் கோடையில், எரிக்கும் வெய்யிலில், அவர்கள், ஷூக்களை பாலிஷ் செய்தார்கள், பழங்களை விற்றார்கள், செய்தித்தாள்களை விற்றார்கள், டூரிஸ்டுகளை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள், மேலும் என்ன வேலை சொன்னாலும் செய்தார்கள்.
காற்று பலமாக வீசிக்கொண்டிருந்த ஒரு இரவில், நாங்கள் அவர்களை அந்த சதுக்கத்துக்கருகே, ஒரு மின்கம்பத்துக்கடியில், கற்கள் பாவிய ஒரு மேடையில் பார்த்தோம். வேறு யாருமே அங்கில்லை.
சாய்ந்து படுத்துக் கொண்டிருந்த நிக்கோலா எங்களைப் பார்த்ததும், நிமிர்ந்து உட்கார்ந்தான். விற்காத செய்தித்தாள்களின் ஒரு கட்டு அவன் காலடியில் இருந்தது. தன் அண்ணனின் தோளில் தலை வைத்து ஜாக்கோப்போ தூங்கிக் கொண்டிருந்தான். நேரம் நடு இரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
"இன்னும் ஏன் தூங்கப்போகவில்லை, நிக்கோலா?"
"பாடுவா (Padua) வில் இருந்து வரும் கடைசி பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறோம், ஐயா! அந்த பஸ் வந்ததும், எல்லா செய்தித்தாள்களும் விற்று விடும்."
"நீங்கள் இவ்வளவு பாடு பட வேண்டுமா? மிகவும் களைத்திருக்கிறீர்களே!"
"நாங்கள் சலித்துக்கொள்வதில்லையே, ஐயா!"
ஆனால், மறு நாள், அந்த சதுக்கத்துக்கருகில், என்னுடைய ஷூக்களை பாலிஷ் செய்து கொள்ளப்போன போது, நான் சொன்னேன், "நிக்கோலா! நீயும் ஜாக்கோப்போவும் தொடர்ந்து உழைப்பதைப் பார்த்தால், உங்களிடம் ஓரளவு பணம் இருக்க வேண்டும். நீங்கள் நல்ல துணி உடுத்துவதில்லை. மிகக் குறைவாகத்தான் சாப்பிடுகிறீர்கள். உங்கள் பணத்தை வைத்துக் கொண்டு என்ன தான் செய்கிறீர்கள்?"
வெய்யிலில் இருப்பதனால், பழுத்த நிறமாயிருந்த அவன் முகம், சங்கடத்தால் சிவந்து, பின்னர் வெளுத்தது. அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
"அமெரிக்கா போவதற்காக பணத்தை சேமிக்கிறீர்களோ?"
"அமெரிக்கா போகவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது, தான். ஆனால், இப்போதைக்கு எங்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன."
"அப்படி என்ன திட்டங்கள் ?"
"வெறும் திட்டங்கள் தான், ஐயா!" என்று மெதுவாகச் சொன்னான். இதைப்பற்றி, மேலும் அவன் பேச விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
நான் சொன்னேன், "நாங்கள் திங்கட்கிழமை எங்கள் ஊருக்குத் திரும்பிப் போகிறோம். போவதற்கு முன், உனக்கு ஏதாவது வேண்டுமென்றால், சொல்."
நிக்கோலா 'ஒன்றும் வேண்டாம்' என்பது போலத் தலையை அசைத்தான். ஆனால் அதற்குள் ஜாக்கோப்போ சொன்னான், "ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் போலேட்டா (Poleta)வுக்குப் போவோம். எப்பொழுதும் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போவோம். நீங்கள் அன்புடன் கேட்பதனால், சொல்கிறேன்- முடிந்தால் நீங்கள் எங்களை உங்கள் காரில் அனுப்பலாம்."
என் டிரைவருக்கு நான் ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமையன்று விடுமுறை கொடுத்திருந்தேன். ஆனாலும், சொன்னேன்,
"நானே, உங்களை அங்கு அழைத்துப் போகிறேன்."
நிக்கோலா அவனுடைய தம்பியை எரிச்சலுடன் முறைத்துக் கொண்டிருந்தான்.
"உங்களுக்கு ஏன் ஐயா வீண் சிரமம்?"
"ஒரு சிரமமும் இல்லை."
அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு, மனமில்லாமல், " சரி" என்றான்.
அடுத்த நாள் மதியம், நாங்கள் ஒரு குன்றின் மேல் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தை நோக்கிப் பயணப்பட்டோம்.
ஏதோவொரு சிறிய வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும் என்று நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால், ஜாக்கோப்போ வழி காடிய படி போனதில், சிவப்புக் கூரையுடன், உயரமான கருங்கல் சுற்றுச்சுவருக்கு நடுவே இருந்த ஒரு பெரிய
தனி பங்களாவுக்கு முன் வண்டியை நிறுத்தினேன். என்னால் நம்பவே முடியவில்லை. வண்டி நின்றவுடனேயே இருவரும் அதிலிருந்து குதித்தார்கள்
"நாங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்ள மாட்டோம், ஐயா! மிஞ்சிப்போனால், ஒரு மணி நேரம் ஆகும். நீங்கள் வேண்டுமானால், இந்த கிராமத்திலுள்ள ஒரு கஃபேக்குப்போய், ஏதாவது குடிக்கலாமே!" என்று சொல்லிக்கொண்டே ஓடிப்போய், அந்தக்கட்டடத்துக்குள் மறைந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, நான் அவர்களைப்பின் தொடர்ந்தேன்.
பக்கவாட்டில் ஒரு கம்பி போட்ட நுழைவாயில் இருந்தது. ஒரு தீர்மானத்துடன் அதில் நுழைந்து அழைப்பு மணியை அழுத்தினேன்.
கண்ணாடி அணிந்த ஒரு இனிமையான முகம் கொண்ட பெண்மணி வந்து கதவைத்திறந்தார். அவர் அணிந்திருந்த நர்ஸ் உடையைப்பார்த்து நான் அதிர்ந்தேன்.
"நான் இப்போது தான் இரண்டு சிறுவர்களை இங்கு கூட்டிக்கொண்டு வந்தேன்" என்றேன்.
"ஓ!"
அவர் முகம் மலர்ந்தது. கதவைத்திறந்து என்னை உள்ளே அனுமதித்தார். "நிக்கோலாவும், ஜாக்கோப்போவும் தானே! நான் உங்களை மேலே அழைத்துச்செல்கிறேன்."
அவர் என்னை ஒரு தாழ்வாரத்தின் வழியே, அந்த ஹாஸ்பிடலுக்குள் அழைத்துச்சென்றார். அந்த பங்களா ஹாஸ்பிடலாக மாறியிருந்தது.
சிறிது சிறிதாகத் தடுக்கப்பட்டிருந்த ஒரு க்யூபிக்கிலின் (cubicle)வாயிலில் நின்ற அந்த நர்ஸ், தன் உதடுகளின் மேல் ஒரு விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி எச்சரித்து விட்டு, ஒரு புன்னகையுடன், அந்த கண்ணாடித் தடுப்பின் வழியே பார்க்கும் படி சொன்னார்.
அந்த இரண்டு சிறுவர்களும் ஒரு இருபது வயதுப்பெண்ணின் படுக்கையின் இரண்டு புரமும் உட்கார்ந்திருந்தார்கள். தலையணைகளின் துணையோடு உட்கார்ந்திருந்த அந்தப்பெண்ணின் முகம் அழகாக இருந்தது. மென்மையான புன்னகையுடன் அவர்கள் நிறுத்தாமல் பேசுவதை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பார்த்தவுடனேயே, அவள் அவர்களுடைய சகோதரி என்பது உருவ ஒற்றுமையில் தெரிந்தது. அவள் அருகே இருந்த ஒரு மேஜையின் மேல் ஒரு மலர்ச்சாடியும், சில பழங்களும், புத்தகங்களும் இருந்தன.
"நீங்கள் உள்ளே போகவில்லையா?" என்று கேட்டார், நர்ஸ். "லூஸியா உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவாள்".
நான், "வேண்டாம்" என்று தலையாட்டி விட்டுத் திரும்பி விட்டேன். ஒரு குடும்பமாக, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, நான் குறுக்கிட விரும்பவில்லை.
ஆனால், படிகளில் இறங்கி வந்த போது, அந்த நர்ஸிடம் அவர்களைப்பற்றி அவருக்குத் தெரிந்ததை எல்லாம், சொல்லும் படி வேண்டினேன்.
அவர் ஆர்வத்துடன் சொல்லத்தொடங்கினார்.
"இந்த ஒரு சகோதரியை விட்டால், அவர்களுக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை. அவர்களுடைய தாயார் முன்னமே இறந்து விட்டிருந்தார். பிரபல பாடகரான அவர்களுடைய தந்தையார், போரில் கொல்லப்பட்டார். ஒரு குண்டு வீச்சில், அவர்களுடைய வீடு முழுவதுமாக இடிந்து, அவர்கள் தெருவுக்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அது வரையில், வசதியான, நல்ல நாகரீகமாக வாழ்ந்த குடும்பம் அது. லூஸியாவே ஒரு பாடகியாவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாள். போதிய உணவு இல்லாமலும், தாங்க முடியாத குளிரிலும் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
அவர்கள் வீட்டின் இடிபாடுகளில் இருந்து பொறுக்கிய சில பொருட்களை வைத்துக்கொண்டு, தலைக்கு மேல் ஏதொவொரு நிழல் கிடைக்குமாறு அவர்களே அமைத்துக்கொண்டு, எப்படியோ, உயிருடன் இருந்து வந்தார்கள்.
மூன்று ஆண்டுகள் ஜெர்மானியர்கள் அந்த நகரத்தை வசப்படுத்தியிருந்த போது, இது தான் அவர்களுடைய நிலைமை. அந்தச்சிறுவர்களுக்கு ஜெர்மானியர்கள் மேல் தீவிர வெறுப்பு வளர்ந்து வந்தது. அவர்களுக்கு எதிராக அங்கே ஒரு இயக்கம் உருவான போது அதில் அவர்கள் தான் முதலில் சேர்ந்தார்கள்.
ஒரு வழியாகப்போர் ஓய்ந்து, அமைதி திரும்பியபின், அவர்களுடைய அன்புச் சகோதரியிடம் திரும்பி வந்தார்கள். அடி மேல் அடி! அவள் நிலைமை இன்னும் மோசம்! அவளுக்கு முதுகுத்தண்டில் டியூபர்குலோஸிஸ் வந்து அவள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள்."
சற்று நிறுத்தி விட்டு அந்த நர்ஸ் தொடர்ந்தார். " இவ்வளவு துன்பத்தைக் கண்டு, இவர்கள் துவண்டு விட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்?"
இந்தக்கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிருக்கவில்லை.
"அவர்கள் தங்கள் சகோதரியை இங்கே அழைத்துக் கொண்டு வந்து, அவளை இங்கு சேர்த்துக்கொண்டு சிகிச்சை அளிக்குமாறு வேண்டினார்கள். இங்கு ஒரு வருடமாக இருக்கிறாள். அவள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஒரு நாள், அவள் நிச்சயம் நடப்பாள்; பாடவும் செய்வாள். என்ன, இப்போது மிகவும் கஷ்டமான காலம். உணவு கிடைப்பதே அரிதாக இருக்கிறது. மிகவும் விலை அதிகமும் கூட. நாங்கள் கட்டணமில்லாமல், இந்த ஆஸ்பத்திரியை நடத்த முடியாது. ஆனால். ஒவ்வொரு வாரமும், லூஸியாவின் சகோதரர்கள் தவறாமல் பணம் கட்டி விடுகிறார்கள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி சம்பாதிக்கிறார்கள் என்று எனக்குத்தெரியாது. இப்போதெல்லாம், வெரோனாவில் வேலை கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனால், அவர்கள் எதைச்செய்தாலும், நன்றாகச்செய்கிறார்கள்".
"உண்மை தான்!" என்று நான் ஒத்துக்கொண்டேன். "இதை விட நன்றாக அவர்கள் செய்ய முடியாது."
அந்தச்சிறுவர்கள் வரும் வரை காத்திருந்து அவர்களை மீண்டும் நகரத்துக்குக் கொண்டு விட்டேன். அவர்கள் என் அருகில், ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்துகொண்டு வந்தார்கள். நானும், ஒன்றும் பேசவில்லை. அவர்களுடைய ரகசியத்தை, பத்திரமாக அவர்கள் காப்பாற்றியதாக நினைத்துவிட்டுப் போகட்டுமே!
அவர்களுடைய நேர்மை என்னை மிகவும் கவர்ந்தது. போரால் அவர்களுடைய உற்சாகத்தை உடைக்க முடியவில்லை. சுய நலமில்லாத அவர்களுடைய அந்த உழைப்பு, மனித வாழ்க்கைக்கு ஒரு உன்னதத்தையும், மனித சமுதாயத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் கொடுத்தது.
Image: A.J.Cronin
Courtesy: Internet
Image may contain: 1 person, closeup

No comments:

Post a Comment