Friday 7 August 2020

வெரோனாவில் இரு கனவான்கள்

Two Gentlemen of Verona' என்ற இந்தக்கதையின் தலைப்பு ஷேக்ஸ்பியரின் நாடகங்களுன் ஒன்றன் தலைப்பு. அந்தக்கதைக்கும் இதற்கும் சம்பந்தம் தலைப்பில் மட்டும் தான்.
இத்தாலி நாட்டில், ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள வெரோனா என்னும் நகரத்தில் தான் சந்தித்த இரண்டு சிறுவர்களைப் பற்றிய இந்தக்கதையை எழுதியவர் A.J.Cronin. இதுவும் பாடப்புத்தகத்தில் இருந்த கதை தான். இதை வகுப்பில் படித்த போது, மாணவர்கள் உணர்ச்சிக் குவியலாக மாறியதை நான் இன்னும் மறக்கவில்லை. இந்தச்சிறார்களை, 'கனவான்கள்' என்று கதாசிரியர் ஏன் அழைக்கிறார் என்பது கதையைப்படித்து முடித்தால், விளங்கும்.
வெரோனாவில் இரு கனவான்கள்
நாங்கள் ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தின் வழியே காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரண்டு சிறுவர்கள் எங்கள் வண்டியை நிறுத்தினார்கள். அவர்கள் சிறு சிறு கூடைகளில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.
என்னுடைய டிரைவர் சொன்னார், "இவர்களிடம் வாங்காதீர்கள். வெரோனாவுக்குப் போனால், இதை விட மலிவாகக் கிடைக்கும். அதுவுமல்லாது......" என்று பாதியில் நிறுத்தினார்.
கசங்கிய உடைகளுடன், இருந்த அவர்களிடம் வாங்க அவருக்கு விருப்பம் இல்லை. அந்த இருவரில் ஒருவன் ஒரு பழைய ஜெர்ஸியும், காக்கி ட்ராயரும் போட்டுக்கொண்டிருந்தான். இன்னொருவன் தன் ஒல்லியான உடம்பை ஒரு படைவீரனுடைய உடையால் சுற்றியிருந்தான். ஆனாலும், பழுப்பு நிற உடலுடனும், கலைந்த தலைமுடியுடனும், ஆர்வம் நிறைந்த பார்வையுடனும் இருந்த அந்த சிறுவர்கள் ஏதோ விதத்தில் எங்களைக் கவர்ந்தார்கள்.
அவர்களுடன் பேசியதில் அவர்கள் சகோதரர்கள் என்று தெரிந்தது. பெரியவன் ஜாக்கோப்போவுக்கு (Jacopo)13 வயது. காரின் கைப்பிடி அளவு உயரமே இருந்த அவனுடைய தம்பி நிக்கோலாவுக்கு (Nicola)12.
அவர்களிடம் இருந்ததிலேயே பெரிய கூடையை, வாங்கிக்கொண்டு, நாங்கள் நகரத்தை நோக்கிப் பயணப்பட்டோம்.
அடுத்த நாள் காலை, நாங்கள் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த போது அருகிருந்த சதுக்கத்தில் அமைந்திருந்த நீரூற்றுக்கு அருகே, அந்தச் சிறுவர்கள் இருவரும் குனிந்த படி, ஷூ பாலிஷ் செய்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களையே சிறிது நேரம் கவனித்தோம். பிறகு, அவர்கள் முன் இருந்த கூட்டம் குறைந்தவுடன், அவர்களிடம் சென்றோம்.
எங்களைப் பார்த்ததும் அவர்கள் எங்களை நட்புடன் வரவேற்றார்கள்.
" நீங்கள் பழ வியாபாரம் செய்வதாக அல்லவோ நினைத்தேன்", என்றேன்.
" நாங்கள் பலவும் செய்கிறோம், ஐயா!" என்று நிக்கோலா பதில் சொன்னான்.
நாங்கள் எங்கள் ஷூக்களை பாலிஷ் செய்து கொள்வோமா என்று, நம்பிக்கையுடன் எங்களைப் பார்த்தான்.
" நாங்கள் இங்கு வரும் பார்வையாளர்களுக்கு நகரத்தைச் சுற்றிக் காண்பிக்கவும் செய்வோம். ஜூலியட்டின் கல்லறை போன்ற இடங்களுக்குக் கூட்டிச் செல்வோம்."
" சரி! அப்படியானால், எங்களைக் கூட்டிச் செல்லுங்கள்!"
நாங்கள் பல இடங்களையும் சுற்றிப் பார்த்த போது அவர்கள் நடந்து கொண்ட விதம் எனக்கு அவர்கள் மேல் ஒரு ஆர்வத்தையும் அக்கறையையும் ஏற்படுத்தியது.
அவர்கள் குழந்தைத்தனமாகவும் வெகுளியாகவும் தான் இருந்தார்கள். ஜாக்கொப்போ ஒரு அணிலைப்போலத் துறு துறுவென்றிருந்தான். நிக்கோலாவின் முகத்தில் எப்போதும் ஒரு மனதைக்கவரும் புன்னகை. ஆனாலும் அவர்கள் இருவர் முகத்திலும் அவர்கள் வயதை மீறிய ஒரு முதிர்ச்சி இருந்தது.
அங்கு தங்கியிருந்த அந்த வாரத்தில் நாங்கள் அவர்களை அடிக்கடி சந்தித்தோம். அவர்கள் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தார்கள். அமெரிக்கன் சிகரெட் ஒரு பாக்கெட் வேண்டுமா? ஓப்பெரா (Opera) வுக்கு டிக்கெட் வேண்டுமா? ஒரு நல்ல ரெஸ்டாரண்டின் பெயர் தெரிய வேண்டுமா? எதுவானாலும் அவர்களைக்கேட்டால் போதும்.
எந்த வேலையையும் செய்வதில் அவர்கள் காட்டிய விருப்பமும், ஈடுபாடும் எங்களை மிகவும் கவர்ந்தது.
அந்தக் கோடையில், எரிக்கும் வெய்யிலில், அவர்கள், ஷூக்களை பாலிஷ் செய்தார்கள், பழங்களை விற்றார்கள், செய்தித்தாள்களை விற்றார்கள், டூரிஸ்டுகளை அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள், மேலும் என்ன வேலை சொன்னாலும் செய்தார்கள்.
காற்று பலமாக வீசிக்கொண்டிருந்த ஒரு இரவில், நாங்கள் அவர்களை அந்த சதுக்கத்துக்கருகே, ஒரு மின்கம்பத்துக்கடியில், கற்கள் பாவிய ஒரு மேடையில் பார்த்தோம். வேறு யாருமே அங்கில்லை.
சாய்ந்து படுத்துக் கொண்டிருந்த நிக்கோலா எங்களைப் பார்த்ததும், நிமிர்ந்து உட்கார்ந்தான். விற்காத செய்தித்தாள்களின் ஒரு கட்டு அவன் காலடியில் இருந்தது. தன் அண்ணனின் தோளில் தலை வைத்து ஜாக்கோப்போ தூங்கிக் கொண்டிருந்தான். நேரம் நடு இரவை நெருங்கிக்கொண்டிருந்தது.
"இன்னும் ஏன் தூங்கப்போகவில்லை, நிக்கோலா?"
"பாடுவா (Padua) வில் இருந்து வரும் கடைசி பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறோம், ஐயா! அந்த பஸ் வந்ததும், எல்லா செய்தித்தாள்களும் விற்று விடும்."
"நீங்கள் இவ்வளவு பாடு பட வேண்டுமா? மிகவும் களைத்திருக்கிறீர்களே!"
"நாங்கள் சலித்துக்கொள்வதில்லையே, ஐயா!"
ஆனால், மறு நாள், அந்த சதுக்கத்துக்கருகில், என்னுடைய ஷூக்களை பாலிஷ் செய்து கொள்ளப்போன போது, நான் சொன்னேன், "நிக்கோலா! நீயும் ஜாக்கோப்போவும் தொடர்ந்து உழைப்பதைப் பார்த்தால், உங்களிடம் ஓரளவு பணம் இருக்க வேண்டும். நீங்கள் நல்ல துணி உடுத்துவதில்லை. மிகக் குறைவாகத்தான் சாப்பிடுகிறீர்கள். உங்கள் பணத்தை வைத்துக் கொண்டு என்ன தான் செய்கிறீர்கள்?"
வெய்யிலில் இருப்பதனால், பழுத்த நிறமாயிருந்த அவன் முகம், சங்கடத்தால் சிவந்து, பின்னர் வெளுத்தது. அவன் தலையைக் குனிந்து கொண்டான்.
"அமெரிக்கா போவதற்காக பணத்தை சேமிக்கிறீர்களோ?"
"அமெரிக்கா போகவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது, தான். ஆனால், இப்போதைக்கு எங்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கின்றன."
"அப்படி என்ன திட்டங்கள் ?"
"வெறும் திட்டங்கள் தான், ஐயா!" என்று மெதுவாகச் சொன்னான். இதைப்பற்றி, மேலும் அவன் பேச விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
நான் சொன்னேன், "நாங்கள் திங்கட்கிழமை எங்கள் ஊருக்குத் திரும்பிப் போகிறோம். போவதற்கு முன், உனக்கு ஏதாவது வேண்டுமென்றால், சொல்."
நிக்கோலா 'ஒன்றும் வேண்டாம்' என்பது போலத் தலையை அசைத்தான். ஆனால் அதற்குள் ஜாக்கோப்போ சொன்னான், "ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்கள் இங்கிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் போலேட்டா (Poleta)வுக்குப் போவோம். எப்பொழுதும் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு போவோம். நீங்கள் அன்புடன் கேட்பதனால், சொல்கிறேன்- முடிந்தால் நீங்கள் எங்களை உங்கள் காரில் அனுப்பலாம்."
என் டிரைவருக்கு நான் ஏற்கனவே ஞாயிற்றுக் கிழமையன்று விடுமுறை கொடுத்திருந்தேன். ஆனாலும், சொன்னேன்,
"நானே, உங்களை அங்கு அழைத்துப் போகிறேன்."
நிக்கோலா அவனுடைய தம்பியை எரிச்சலுடன் முறைத்துக் கொண்டிருந்தான்.
"உங்களுக்கு ஏன் ஐயா வீண் சிரமம்?"
"ஒரு சிரமமும் இல்லை."
அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு, மனமில்லாமல், " சரி" என்றான்.
அடுத்த நாள் மதியம், நாங்கள் ஒரு குன்றின் மேல் அமைந்திருந்த ஒரு சிறிய கிராமத்தை நோக்கிப் பயணப்பட்டோம்.
ஏதோவொரு சிறிய வீட்டுக்குப் போக வேண்டியிருக்கும் என்று நான் கற்பனை செய்திருந்தேன். ஆனால், ஜாக்கோப்போ வழி காடிய படி போனதில், சிவப்புக் கூரையுடன், உயரமான கருங்கல் சுற்றுச்சுவருக்கு நடுவே இருந்த ஒரு பெரிய
தனி பங்களாவுக்கு முன் வண்டியை நிறுத்தினேன். என்னால் நம்பவே முடியவில்லை. வண்டி நின்றவுடனேயே இருவரும் அதிலிருந்து குதித்தார்கள்
"நாங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்ள மாட்டோம், ஐயா! மிஞ்சிப்போனால், ஒரு மணி நேரம் ஆகும். நீங்கள் வேண்டுமானால், இந்த கிராமத்திலுள்ள ஒரு கஃபேக்குப்போய், ஏதாவது குடிக்கலாமே!" என்று சொல்லிக்கொண்டே ஓடிப்போய், அந்தக்கட்டடத்துக்குள் மறைந்தார்கள்.
சில நிமிடங்கள் கழித்து, நான் அவர்களைப்பின் தொடர்ந்தேன்.
பக்கவாட்டில் ஒரு கம்பி போட்ட நுழைவாயில் இருந்தது. ஒரு தீர்மானத்துடன் அதில் நுழைந்து அழைப்பு மணியை அழுத்தினேன்.
கண்ணாடி அணிந்த ஒரு இனிமையான முகம் கொண்ட பெண்மணி வந்து கதவைத்திறந்தார். அவர் அணிந்திருந்த நர்ஸ் உடையைப்பார்த்து நான் அதிர்ந்தேன்.
"நான் இப்போது தான் இரண்டு சிறுவர்களை இங்கு கூட்டிக்கொண்டு வந்தேன்" என்றேன்.
"ஓ!"
அவர் முகம் மலர்ந்தது. கதவைத்திறந்து என்னை உள்ளே அனுமதித்தார். "நிக்கோலாவும், ஜாக்கோப்போவும் தானே! நான் உங்களை மேலே அழைத்துச்செல்கிறேன்."
அவர் என்னை ஒரு தாழ்வாரத்தின் வழியே, அந்த ஹாஸ்பிடலுக்குள் அழைத்துச்சென்றார். அந்த பங்களா ஹாஸ்பிடலாக மாறியிருந்தது.
சிறிது சிறிதாகத் தடுக்கப்பட்டிருந்த ஒரு க்யூபிக்கிலின் (cubicle)வாயிலில் நின்ற அந்த நர்ஸ், தன் உதடுகளின் மேல் ஒரு விரலை வைத்து அமைதியாக இருக்கும் படி எச்சரித்து விட்டு, ஒரு புன்னகையுடன், அந்த கண்ணாடித் தடுப்பின் வழியே பார்க்கும் படி சொன்னார்.
அந்த இரண்டு சிறுவர்களும் ஒரு இருபது வயதுப்பெண்ணின் படுக்கையின் இரண்டு புரமும் உட்கார்ந்திருந்தார்கள். தலையணைகளின் துணையோடு உட்கார்ந்திருந்த அந்தப்பெண்ணின் முகம் அழகாக இருந்தது. மென்மையான புன்னகையுடன் அவர்கள் நிறுத்தாமல் பேசுவதை அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். பார்த்தவுடனேயே, அவள் அவர்களுடைய சகோதரி என்பது உருவ ஒற்றுமையில் தெரிந்தது. அவள் அருகே இருந்த ஒரு மேஜையின் மேல் ஒரு மலர்ச்சாடியும், சில பழங்களும், புத்தகங்களும் இருந்தன.
"நீங்கள் உள்ளே போகவில்லையா?" என்று கேட்டார், நர்ஸ். "லூஸியா உங்களைப் பார்த்தால் சந்தோஷப்படுவாள்".
நான், "வேண்டாம்" என்று தலையாட்டி விட்டுத் திரும்பி விட்டேன். ஒரு குடும்பமாக, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, நான் குறுக்கிட விரும்பவில்லை.
ஆனால், படிகளில் இறங்கி வந்த போது, அந்த நர்ஸிடம் அவர்களைப்பற்றி அவருக்குத் தெரிந்ததை எல்லாம், சொல்லும் படி வேண்டினேன்.
அவர் ஆர்வத்துடன் சொல்லத்தொடங்கினார்.
"இந்த ஒரு சகோதரியை விட்டால், அவர்களுக்கு இந்த உலகத்தில் யாருமே இல்லை. அவர்களுடைய தாயார் முன்னமே இறந்து விட்டிருந்தார். பிரபல பாடகரான அவர்களுடைய தந்தையார், போரில் கொல்லப்பட்டார். ஒரு குண்டு வீச்சில், அவர்களுடைய வீடு முழுவதுமாக இடிந்து, அவர்கள் தெருவுக்கு வர வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. அது வரையில், வசதியான, நல்ல நாகரீகமாக வாழ்ந்த குடும்பம் அது. லூஸியாவே ஒரு பாடகியாவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தாள். போதிய உணவு இல்லாமலும், தாங்க முடியாத குளிரிலும் அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
அவர்கள் வீட்டின் இடிபாடுகளில் இருந்து பொறுக்கிய சில பொருட்களை வைத்துக்கொண்டு, தலைக்கு மேல் ஏதொவொரு நிழல் கிடைக்குமாறு அவர்களே அமைத்துக்கொண்டு, எப்படியோ, உயிருடன் இருந்து வந்தார்கள்.
மூன்று ஆண்டுகள் ஜெர்மானியர்கள் அந்த நகரத்தை வசப்படுத்தியிருந்த போது, இது தான் அவர்களுடைய நிலைமை. அந்தச்சிறுவர்களுக்கு ஜெர்மானியர்கள் மேல் தீவிர வெறுப்பு வளர்ந்து வந்தது. அவர்களுக்கு எதிராக அங்கே ஒரு இயக்கம் உருவான போது அதில் அவர்கள் தான் முதலில் சேர்ந்தார்கள்.
ஒரு வழியாகப்போர் ஓய்ந்து, அமைதி திரும்பியபின், அவர்களுடைய அன்புச் சகோதரியிடம் திரும்பி வந்தார்கள். அடி மேல் அடி! அவள் நிலைமை இன்னும் மோசம்! அவளுக்கு முதுகுத்தண்டில் டியூபர்குலோஸிஸ் வந்து அவள் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தாள்."
சற்று நிறுத்தி விட்டு அந்த நர்ஸ் தொடர்ந்தார். " இவ்வளவு துன்பத்தைக் கண்டு, இவர்கள் துவண்டு விட்டார்கள் என்றா நினைக்கிறீர்கள்?"
இந்தக்கேள்விக்கு நான் பதில் சொல்ல வேண்டிருக்கவில்லை.
"அவர்கள் தங்கள் சகோதரியை இங்கே அழைத்துக் கொண்டு வந்து, அவளை இங்கு சேர்த்துக்கொண்டு சிகிச்சை அளிக்குமாறு வேண்டினார்கள். இங்கு ஒரு வருடமாக இருக்கிறாள். அவள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஒரு நாள், அவள் நிச்சயம் நடப்பாள்; பாடவும் செய்வாள். என்ன, இப்போது மிகவும் கஷ்டமான காலம். உணவு கிடைப்பதே அரிதாக இருக்கிறது. மிகவும் விலை அதிகமும் கூட. நாங்கள் கட்டணமில்லாமல், இந்த ஆஸ்பத்திரியை நடத்த முடியாது. ஆனால். ஒவ்வொரு வாரமும், லூஸியாவின் சகோதரர்கள் தவறாமல் பணம் கட்டி விடுகிறார்கள்.
அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி சம்பாதிக்கிறார்கள் என்று எனக்குத்தெரியாது. இப்போதெல்லாம், வெரோனாவில் வேலை கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனால், அவர்கள் எதைச்செய்தாலும், நன்றாகச்செய்கிறார்கள்".
"உண்மை தான்!" என்று நான் ஒத்துக்கொண்டேன். "இதை விட நன்றாக அவர்கள் செய்ய முடியாது."
அந்தச்சிறுவர்கள் வரும் வரை காத்திருந்து அவர்களை மீண்டும் நகரத்துக்குக் கொண்டு விட்டேன். அவர்கள் என் அருகில், ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்துகொண்டு வந்தார்கள். நானும், ஒன்றும் பேசவில்லை. அவர்களுடைய ரகசியத்தை, பத்திரமாக அவர்கள் காப்பாற்றியதாக நினைத்துவிட்டுப் போகட்டுமே!
அவர்களுடைய நேர்மை என்னை மிகவும் கவர்ந்தது. போரால் அவர்களுடைய உற்சாகத்தை உடைக்க முடியவில்லை. சுய நலமில்லாத அவர்களுடைய அந்த உழைப்பு, மனித வாழ்க்கைக்கு ஒரு உன்னதத்தையும், மனித சமுதாயத்துக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் கொடுத்தது.
Image: A.J.Cronin
Courtesy: Internet
Image may contain: 1 person, closeup

தொப்பி

 பல ஆண்டுகளுக்கு முன், ஒரு சிறுமிக்கு C B S E ஹிந்தி பாடம் எடுக்கும் போது இந்தக் கதையைச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

நடு நடுவே, அற்புதமான பழமொழிகளும், ரசிக்கும் படியான சொற்றொடர்களும், பாயசத்தில் வரும் முந்திரிப் பருப்பைப்போல் சுவை கூட்டும் விதமாக இந்தக்கதை சொல்லப்பட்டிருந்த அழகு என்னைக் கவர்ந்தது. சிறுவர்களுக்கான கதை தான் என்றாலும், இடையிடையே, நாட்டு நடப்பையும் கிண்டல் அடித்த விதம் நம்மை அறியாமல் புன்னகையை வரவழைக்கும். 'Topi' என்ற தலைப்புக்கொண்ட இந்தக்கதை ஸ்ருஞ்சய் (Srinjay) என்பவரால் எழுதப்பட்டு எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. கீழே உள்ளது மொழிபெயர்ப்பு அல்ல. 90% மூலத்துக்கு உண்மையாக உள்ள, retold story எனலாம்.
தொப்பி
சிட்டுக்குருவிகள் இரண்டு, ஜோடியாக ஒரு மரத்தின் மேல் அன்புடன் வாழ்ந்து வந்தன. காலையில், சூரியன் உதித்தவுடன் இரண்டும், சேர்ந்தே, எழுந்திருக்கும், சேர்ந்தே, இரை தேடப்போகும், சேர்ந்தே, சிரிக்கும், சேர்ந்தே, எங்கும் திரியும். சூரியன் மறையும் நேரம் ஆனால், மீண்டும் அந்த மரக்கிளைக்கு வந்து ஓய்வெடுக்கும். நாள் முழுவதும், பார்த்தது, கேட்டது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் பெண்குருவி தன் இணையிடம் சொன்னது, " இந்த மனிதர்களைப் பார்த்தாயா? எவ்வளவு அழகாக உடை அணிகிறார்கள்! அது அவர்களுக்கு எவ்வளவு நன்றாக இருக்கிறது?"
ஆண்குருவி சொன்னது, " ஐயே! நீ தான் மெச்சிக்கொள்ள வேண்டும்! தங்கள் அழகை அவர்கள் உடையணிந்து மறைத்துக் கொள்கிறார்கள்! நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! நீ ஒரு புடவை கட்டிக்கொண்டால், நன்றாகவா இருக்கும்?"
"அதை விடு! அவர்கள் அழகுக்காக மட்டும் உடை அணிவதில்லை. குளிரிலிருந்தும், வெப்பத்திலிருந்தும் தங்களைக் காத்துக் கொள்வதற்காகவும் தான் உடை அணிகிறார்கள்."
"உனக்குப் புரிவதேயில்லை! இப்படி உடை அணிந்து பழகியதனால், அவர்களால், வெப்பம், குளிர் எதையுமே தாங்க முடிவதில்லை. அது மட்டுமா? உடையினாலேயே, அவர்களின் பணம், சமூக அந்தஸ்து எல்லாம் தெரிந்து விடுகிறதே! மனிதர்களுக்குள் வேற்றுமை தான் வளர்கிறது. வேலை செய்வதற்காக இருக்கும் கைகளையும், கால்களையும், கையுறைகளையும், காலுறைகளையும் அணிந்து ஒரு வேலையும் செய்ய முடியாதவைகளாகச் செய்து விடுகிறார்கள்! அழகான தலை முடியைக்கூட, தொப்பி அணிந்து மறைத்துக்கொண்டு விடுகிறார்கள்!"
படபடவென்று பேசி, ஆண்குருவி தன் அபிப்பிராயத்தை வலியுறுத்த முயற்சித்தது.
ஆனால், பெண்குருவி மசியவில்லை.
"அவர்கள் அணியும் தொப்பி தான் எவ்வளவு அழகாக இருக்கிறது? எனக்கும் ஒரு தொப்பி அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது!"
" இதென்ன, புதுப்பிரச்சினை! தொப்பி என்றால் சும்மாவா? ஒருவர் தலையில் இருக்கும் தொப்பிக்காக எவ்வளவு அல்லல் பட வேண்டி இருக்கிறது! எத்தனையோ பேர் தலைக்குத் தொப்பி போட்டால் தான் அவர்கள் தங்கள் தலையில் இருக்கும் முடியும்! நீ இந்த ஆசையெல்லாம் படாதே! சொல்லி விட்டேன்!"
ஆண் குருவி கொஞ்சம் அறிவாளி! ஆகவே அதில் உள்ள பிரச்சினைகளைப் பார்த்தது. ஆனால், பெண்குருவிக்குப் பிடிவாதம் அதிகம். தனக்கென்று ஒரு தொப்பியைப் பெற்று விடவேண்டும் என்பதே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று நினைக்கத் தொடங்கியது.
மறு நாள், இரண்டும் இரை தேடக்கிளம்பின. குப்பைகளைக் கிளறிக்கொண்டிருந்த போது, பெண் குருவி ஒரு பருத்தி
உருண்டையைப் பார்த்தது. அதற்கு ஒரே ஆனந்தம்! " கிடைத்து விட்டது! கிடைத்து விட்டது!" என்று கூவிக்கொண்டே ஆண் குருவியை நோக்கிப் பறந்து வந்தது. அதன் மூக்கில் ஒரு பருத்தி உருண்டை!
" என்ன கிடைத்து விட்டது?" என்றது ஆண் குருவி. அந்தப் பருத்தி உருண்டையைக்காட்டி, "தொப்பியின் ஒரு பகுதி கிடைத்து விட்டது! " என்றது பெண்குருவி.
கல கலவென்று சிரித்த ஆண்குருவி, " இப்படித்தான் ரோட்டில் போய்க்கொண்டிருந்த ஒருவனுக்கு, குதிரைவண்டிக்காரன் கையில் இருந்து விழுந்து விட்ட சவுக்கு கிடைத்ததாம். "சவுக்கு கிடைத்தாயிற்று. இனி, குதிரையும், வண்டியும் தான் பாக்கி!" என்றானாம், என்றது.
பெண் குருவிக்கு சிரிப்பு வரவில்லை.
"பார்த்துக்கொண்டே இரு! நான் எப்படி தொப்பிக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று பார்!" என்றது.
அந்தப்பருத்தி உருண்டையை எடுத்துக்கொண்டு குருவி பருத்தியை சுத்தம் செய்பவனிடம் பறந்து சென்றது.
"பருத்தியை சுத்தம் செய்யும் அண்ணா! பருத்தியை சுத்தம் செய்யும் அண்ணா! இந்தப்பருத்தியில் இருந்து கொட்டைகளை நீக்கிக் கொடேன்!" என்று கேட்டது.
பருத்தியை சுத்தம் செய்பவனோ வயதானவன். குளிர் காலம் வேறு! கிழிந்து போன கம்பளியைப் போர்த்திக்கொண்டு, நடுங்கிக் கொண்டே கத்தினான், " நீ இங்கிருந்து போகிறாயா, இல்லையா! நான் ராஜாவுக்கு வேண்டி, புது ரஜாய்க்காக பருத்தியை சுத்தம் செய்ய வேண்டும். உனக்கு ஓசியில் வேலை செய்யவெல்லாம் முடியாது."
"கோபித்துக்கொள்ளாதே அண்ணா! நான் கூலி கொடுக்காமல் வேலை வாங்கிக்கொள்ள மாட்டேன். இந்தப் பருத்தியை சுத்தம் செய்த பின் கிடைக்கும் பஞ்சில் பாதி உனக்கு, பாதி எனக்கு!" என்றது.
அவன் சந்தோஷமாக அந்தப்பருத்தியை நன்றாக சுத்தம் செய்து, பாதியைத் தான் எடுத்துக்கொண்டு, மீதியைக் குருவிக்குக் கொடுத்தான்.
அதை வாங்கிக்கொண்டு நூல் நூற்பவனிடம் குருவி செல்ல விரும்பியது. இப்போது ஆண் குருவிக்கும் நம்பிக்கை வந்து, அதுவும், தன் இணையுடன் சேர்ந்து நூல் நூற்பவனின் வீட்டுக்குச்சென்றது.
நூல் நூற்பவனுக்கு மிகவும் வயதாகி, முதுகு வளைந்து போய் இருந்தது. " நூல் நூற்கும் அண்ணா! நூல் நூற்கும் அண்ணா! இந்த சுத்தம் செய்த பஞ்சை நூலாக நூற்றுத் தருகிறாயா?" என்று கேட்டது, பெண் குருவி.
இந்தக் குருவியின் வேண்டுகோளைக் கேட்ட நூல் நூற்பவனுக்கு மிகவும் கோபம் வந்தது. " போங்கள், இங்கிருந்து! எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் ராஜாவுக்கு ஒரு புது அங்கிக்காக நூல் நூற்க வேண்டும். எனக்கு இலவசமாக வேலை செய்ய நேரம் இல்லை." என்று சொல்லி, அவைகளைத் துரத்தினான்.
" இங்கு எல்லாருமே ராஜாவுக்காகத்தான் வேலை செய்வீர்களா?" என்று கேட்டது, பெண்குருவி.
" நீ எந்த தேசத்திலிருந்து வருகிறாய்? இது கூடத் தெரியாதா? இங்கு எல்லாரும் ராஜாவுக்காகத்தான் உழைக்க வேண்டும். அவருக்கு வேண்டியவர்களுக்காகவும் தான்."
" கோபித்துக்கொள்ளாதே, அண்ணா! நாங்கள் கூலி கொடுக்காமல் வேலை வாங்க மாட்டோம். நீ இதில் இருந்து நூற்கும் நூலில் பாதியை எடுத்துக்கொள். மீதியை எங்களுக்குக் கொடு" என்றது அந்தக்குருவி.
"அட! இந்த அளவு கூலியை யாருமே கொடுத்ததில்லையே!" என்று மகிழ்ந்து, நூல் நூற்பவன் மிகவும் நேர்த்தியாக, சர்க்காவில் நூல் நூற்றுத் தந்தான்.அடுத்து இரண்டும் நெசவு நெய்பவனிடம் சென்றன. " நெசவு நெய்யும் அண்ணா! நெசவு நெய்யும் அண்ணா! என்னிடம் இருக்கும் நூலைத் துணியாக நெய்து தருகிறாயா? என்று கேட்டது, பெண் குருவி.
" நான் ராஜாவுக்காக, ஒரு புது உடைக்கு வேண்டித் துணி நெய்ய வேண்டும். இப்போது ராஜாவின் ஆட்கள் வந்து விடுவார்கள். என்னால் முடியாது" என்று சொல்லிவிட்டுத்தன் வேலையைத்தொடர்ந்தான் நெசவாளி.
"நாங்கள் ஒன்றும் சும்மா வேலை செய்யச்சொல்லவில்லை, அண்ணா! நெய்த துணியில் பாதியை நீ எடுத்துக்கொள். மீதியைக் கொடுத்தால் போதும்" என்றன குருவிகள்.
உடனே, நெசவாளி, அந்த நூலில், அழகாகத்துணி நெய்து கொடுத்தான்.
முக்கால் தூரம் கடந்தாகி விட்டது. அடுத்து, தையல்காரனிடம் போக வேண்டும்.
தையல்காரன் மிகவும் களைத்திருந்தான்.
"தையல் கார அண்ணா! தையல் கார அண்ணா! கொஞ்சம் இந்தத் துணியில் ஒரு தொப்பி தைத்துக்கொடேன்" என்றன குருவிகள்.
அவனுக்குச் சரியான கோபம் வந்தது. " இங்கே பாருங்கள்! அரசருடைய ஏழாவது ராணிக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. அந்தக் குழந்தைக்கு நான் நிறைய புது உடைகள் தைக்க வேண்டும்' என்றான். மேலும்,
"எல்லாரும் வேலை தான் வாங்கிக்கொள்கிறார்கள். கூலி ஒருவரும் கொடுப்பதில்லை" என்று சலித்துக்கொண்டான்.
" நாங்கள் கூலி கொடுக்காமல் ஏமாற்ற மாட்டோம், அண்ணா! இந்தத் துணியில் இரண்டு தொப்பி தைத்து ஒன்றை நீ வைத்துக்கொள். ஒன்றை மட்டும் எங்களுக்குக் கொடு" என்றன.
தையல்காரனுக்கும் மிகுந்த மகிழ்ச்சி! உடனே கத்தரிக்கோலை எடுத்து, அந்தத்துணியை அளந்து வெட்டினான். ஊசி நூலை எடுத்து, அழகாக இரண்டு தொப்பிகள் தைத்தான். அது மட்டுமல்ல. அதன் மேல் ஐந்து குஞ்சலங்களையும் பொருத்தினான்.
அந்தத் தொப்பி கைக்குக் கிடைத்ததும், பெண் குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. " என் தொப்பியைப்பார்! அதில் உள்ள குஞ்சலங்களைப்பார்!" என்று கூத்தாட ஆரம்பித்தது.
"உண்மையில், நீ ராணி மாதிரி தான் இருக்கிறாய்" என்று புகழ்ந்தது ஆண் குருவி.
" ராஜா மாதிரி என்று சொல், என் ராஜாவே! எனக்கு ஈடாக ஒரு ராஜா உண்டா?" என்று பெருமிதத்துடன் பேசிய பெண் குருவிக்கு திடீரென்று, அந்த தேசத்து ராஜாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றி விட்டது.
குருவி அரண்மனையைச் சென்றடைந்த போது, ராஜா திறந்த வெளியில் உடம்புக்கு எண்ணெய் தடவி மாலிஷ் செய்து கொண்டிருந்தான். ஒரு சேவகன் அவனுடைய தலைக்கு எண்ணெய் தடவித் தேய்த்துக் கொண்டிருந்தான். ஒருவன் அவன் கை விரல்களுக்கு சொடக்கு எடுத்துக்கொண்டிருந்தான். ஒருவன் ராஜாவின் கால்களுக்கு எண்ணெய் தடவி நீவி விட்டுக் கொண்டிருந்தான். ராஜாவுக்கு சற்று தூரத்தில் போய் உட்கார்ந்த குருவி, " ஐயே! ராஜாவுக்குத் தொப்பியே இல்லை! எனக்குக் குஞ்சலத்தொப்பி இருக்கிறதே! என்று கூவியது.
சத்தம் கேட்டுத் திரும்பிய ராஜாவுக்கு ஒரே ஆச்சரியம்! இதென்ன! குருவியின் தலையில் தொப்பி இருக்கிறதே!
குருவியோ, "ராஜாவுக்குத் தொப்பியே இல்லை! எனக்குக் குஞ்சலத்தொப்பி இருக்கிறதே! என்று கூவிக்கொண்டே இருந்தது.
அதைக்கேட்ட ராஜா, " யாராவது சீக்கிரம் என்னுடைய தொப்பியைக்கொண்டு வாருங்கள்" என ஆணையிடவும், அடுத்த நிமிடம், அவருடைய தொப்பி வந்தது. தொப்பியைத் தலையில் அணிந்து கொண்ட ராஜா, குருவியைப்பார்த்து, " இதோ, பார்! என்னிடமும் தொப்பி இருக்கிறதே!" என்றான்.
' ஐயே! அது வெறும் தொப்பி! என் தொப்பியில் ஐந்து குஞ்சலங்கள் இருக்கின்றனவே!" என்றது குருவி.
ராஜாவுக்கு மிகவும் கோபம் வந்தது. " என்னைப்போய் ஒரு குருவி கிண்டல் செய்வதாவது! அந்தக்குருவியைப்பிடித்து அதன் கழுத்தை நெறித்து அதைத்தூர எறியுங்கள்! அந்தத்தொப்பியை என்னிடம் கொடுங்கள். அதைக்காலால் எட்டி உதைக்கிறேன்." என்றான் ராஜா.
அங்கிருந்த மந்திரி மிகவும் பணிவுடன் சொன்னார், " அதைக் கொன்று நம் கையை அழுக்காக்கிக் கொள்வானேன், மகாராஜா! அதன் தொப்பியை மட்டும் பிடுங்கி விடலாம்" என்றார். மன்னர் "சரி" என்று சொல்லவே ஒரே பாய்ச்சலில் அதன் தொப்பியைப் பிடுங்கி ராஜாவிடம் கொடுத்தான், ஒரு சேவகன்.
அதைக்காலால் நசுக்கி எறியத்தான் நினைத்தான் ராஜா. அதற்குள் அதன் தரமும், அழகும், நேர்த்தியான வேலைப்பாடும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன.
" இவ்வளவு அழகான தொப்பியை என் ராஜ்ஜியத்தில் யார் தைத்தது? என்று கேட்டான்.
உடனே அவனது ஆட்கள் தேடிப்போய் அந்தத்தையற்காரனை அழைத்து வந்தார்கள்.
" மன்னியுங்கள், மகாராஜா!" என்று கெஞ்சிக்கொண்டே வந்தான் தையற்காரன்.
"மன்னிப்பெல்லாம், அப்புறம்! எப்படி நீ இவ்வளவு அழகான தொப்பியைத் தைத்தாய்?" என்று கேட்டான், ராஜா.
" மகாராஜா! குருவி கொடுத்த துணி மிகவும் அருமையாக நெய்யப்பட்டிருந்தது" என்றான்.
" யார் இதற்கான துணியை நெய்தது?" என்று கத்தினான்.
சிறிது நேரத்தில் நெசவாளி பயந்து கொண்டே வந்து சேர்ந்தான்.
அவனிடம் "எப்படி இவ்வளவு நன்றாகத் துணி நெய்தாய்?" என்று கேட்ட போது, " மகாராஜா! குருவி கொண்டு வந்த நூலின் தரம் அப்படி" என்றான்.
இதே மாதிரி, நூல் நூற்றவனை அழைத்துக்கேட்ட போது அவன், குருவி கொடுத்த பஞ்சு மிக நன்றாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது"
என்றான்.
பருத்தியைச் சுத்தம் செய்தவனைக் கூப்பிட்டுக்கேட்டால், " எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தால், நான் காரணத்தைச் சொல்கிறேன்" என்றான்.
" பிழைத்துப்போ! உண்மையைச்சொல்!" என்றான், ராஜா.
"பிரபோ! அந்தக்குருவி மிக நல்ல கூலி கொடுத்தது. உடனேயும் கொடுத்தது. கூலி உடனுக்குடன் கிடைத்தால், எந்தத் தொழிலாளியும் மனமார வேலை செய்வான்!" என்று கூறினான்.
" பார்த்துக்கொள், ராஜா! நான், கூலி கொடுத்து இந்தத் தொப்பியைச் செய்வித்திருக்கிறேன், சும்மா இல்லை!" என்று கொக்கரித்தது, குருவி. போதாததற்கு, " இந்த ராஜாவிடம் பணமே இல்லை, ஒரு தொப்பி கூட செய்து கொள்ள முடியாமல், என்னிடம் இருந்து, என் தொப்பியைப் பிடுங்கிக்கொண்டு விட்டான்" என்று கூச்சலிட்டது.
ராஜாவுக்கு பகீரென்றது. தன் கஜானா காலியாக இருப்பது இந்தக்குருவிக்கு எப்படித் தெரிந்தது? எவ்வளவு தான் கடுமையாக வரி வசூல் செய்தாலும், ஆடம்பரமான வாழ்க்கைக்கே எல்லாம் போதவில்லை. கஜானா எப்போதும் காலி தான்.
அதற்குள், இங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காக, அனேகம் பேர் அங்கே கூடி விட்டனர்.
மந்திரி சொன்னார், " இந்தக்குருவி மகாராஜாவின் மானத்தை வாங்காமல் விடாது போல் இருக்கிறதே!"
ராஜாவுக்கும் அந்த பயம் வந்து விட்டது. "அந்தத்தொப்பியை அந்தக்குருவிக்குத் திருப்பிக்கொடுத்து விடுங்கள்!" என்று ஆணையிட்டான்.
உடனே ஒரு சேவகன், அந்தத் தொப்பியைக் குருவியை நோக்கி எறிந்தான்.
அதைக் கப்பென்று பிடித்து, மீண்டும் அணிந்து கொண்ட குருவி கத்தியது, " இந்த ராஜா, சரியான பயந்தாங்கொள்ளி! என்னைப் பார்த்து பயந்து போய்த் தொப்பியைத் திருப்பித் தந்து விட்டான்" என்று.
"ஐயோ! இந்த வாயாடிக்குருவியின் வாயில் யார் விழுவார்கள்?" என்று கேட்ட ராஜா, தன் தொப்பியைக் கெட்டியாகப்பிடித்துக்கொண்டான்.
Image : Author - Srinjay
Courtesy: Internet
Image may contain: 1 person, eyeglasses

Tuesday 4 August 2020

மூன்று கேள்விகள் - Three Questions - Count Leo Tolstoy

கவுண்ட் லியோ டால்ஸ்டாயின் (Count Leo Tolstoy)கதைகள் ஆழமாக சிந்திக்க வைப்பவை! எக்காலத்துக்கும் பொருந்துபவை! அவருடைய புதினங்களைப்போலவே அவருடைய சிறுகதைகளும் மிகவும் பிரபலமானவை. இந்தக்கதையில் இந்திய மணம் வீசுவது போல் எனக்குத் தோன்றுகிறது. எனக்கு மட்டும் தானா?
மூன்று கேள்விகள்
ஒரு ஊரில் ஒரு மன்னர் இருந்தார். அவர் மிகவும் புத்திசாலி. ஒரு நாள் அவர் தனியே யோசித்துக்கொண்டிருந்த போது அவர் மனத்தில் ஒரு எண்ணம் தோன்றியது. அவர் எடுத்த எந்த ஒரு செயலிலும் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்றால், அவருக்கு இந்த மூன்று கேள்விகளுக்கு விடை தெரிந்தாக வேண்டும் ------
1. ஒரு செயலைத்தொடங்குவதற்கான சரியான நேரம் எது?
2. யார் சொல்லும் பேச்சைக் கேட்க வேண்டும்?
3. எது மிகவும் முக்கியமான வேலை?
இந்த எண்ணம் தோன்றியவுடனே, மன்னர் இந்தக்கேள்விகளுக்கு சரியான விடையளிப்பவருக்கு சிறந்த வெகுமதி அளிக்கப்படும்
என்று தன் நாட்டு மக்களுக்கு முரசறைந்து தெரியப்படுத்தினார். இதைக்கேள்விப்பட்டவுடன், கல்வி கேள்விகளிற் சிறந்த அறிஞர்கள் அவருடைய சபையை முற்றுகையிடத் துவங்கினர். மன்னர் ஆவலுடன் அவர்களிடம் இந்தக் கேள்விகளைக்கேட்டார்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பதில் அளித்தனர்.
ஒருவர் , "முன் கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் எல்லாச் செயல்களுமே சரியாக வரும்" என்றார். வேறொருவர் சொன்னார்,
" எல்லாச் செயல்களையும் எப்படி முன் கூட்டியே திட்டமிட முடியும்? எதிர்பாராமல் சில செயல்கள் செய்ய நேரிடலாம் அல்லவா?" என்றார். இன்னொருவர், "வேண்டாத கேளிக்கைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்காமல் இருந்தால், எல்லாச் செயல்களையும் சரியான நேரத்தில் முடிக்கலாம்" என்றார்.
இவையனைத்தும், சரியான பதில்கள் போலத் தோன்றினாலும், எல்லாச் சூழ் நிலைகளுக்கும் சரியாக இருக்காது என்பதால், மன்னருக்குத் திருப்தி உண்டாகவில்லை.
மற்ற கேள்விகளுக்கு வந்த பதில்களும் இவ்வாறாகத்தான் இருந்தன.
இரண்டாவதான "யார் சொல்லும் பேச்சைக் கேட்க வேண்டும்?" என்ற கேள்விக்கு, ஒருவர் சொன்னார், "ஒருவர் எப்போதும் அறிவாளிகளின் பேச்சைக்கேட்க வேண்டும்" என்று. இன்னொருவர், "புரோகிதரின் பேச்சைக்கேட்டு நடக்க வேண்டும்" என்றார். மூன்றாமவர், "மருத்துவர்கள் பேச்சைத்தான் கேட்க வேண்டும்" என்றார். மன்னருக்கு எந்தப் பதிலும் சரியாகப்படவில்லை.
மூன்றாவதான, "எது மிகவும் முக்கியமான வேலை?" என்ற கேள்விக்கு ஒருவர் சொன்னார், " அறிவியல் தான் உலகிலேயே மிகவும் முக்கியமானது" என்று. மற்றவர்கள், போர்த்திறமை, தெய்வ வழிபாடு போன்றவற்றைக் குறிப்பிட்டார்கள்.
மன்னர் யார் பதிலையும் ஏற்றுக்கொள்ளாமல், அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார். இறுதியில், அருகில் இருந்த ஆசிரமத்தில் வசித்து வந்த ஒரு சாதுவிடம் இந்தக்கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்று பார்க்கத் தீர்மானித்தார்.
அந்த சாது சிறந்த ஞானி என்ற புகழ் பெற்றவர். அவர் காட்டிடையே, ஒரு குடிசையில் வசித்து வந்தார். எளிய மனிதர்களை மட்டுமே சந்தித்து வந்தார். பணக்காரர்களையோ, அதிகாரத்தில் இருப்பவர்களையோ அவர் சந்திப்பதில்லை.
இதை அறிந்த மன்னர் , எளிய உடைகளை அணிந்து கொண்டு, ஆசிரமத்துக்குச் சற்றுத்தொலைவிலேயே தன் குதிரையை விட்டு இறங்கித் தன் மெய்க்காப்பாளரையும் அங்கேயே விட்டு விட்டு , சாதுவை சந்திக்கத் தனியாக நடந்து சென்றார்.
மன்னர் குடிசையை நெருங்கிய போது அந்த சாது தன் குடிசைக்கு முன்னால் இருந்த நிலத்தைக் கொத்திக்கொண்டிருந்தார். வந்தவரை வரவேற்று விட்டுத்தன் வேலையைத் தொடர்ந்தார். மிகவும் இளைத்து, பலவீனமாக இருந்த சாது, ஒவ்வொரு முறை நிலத்தைக்கொத்திக் கொஞ்சம் மண்ணை எடுக்கும் போதும் திணறித்திணறி மூச்சு விட்டார்.
மன்னர் அவரிடம் சென்று, " ஐயா! உங்களிடம் மூன்று கேள்விகளுக்குப் பதில் தேடி வந்திருக்கிறேன். சரியான நேரத்தில் சரியான வேலையை எப்படி செய்வது? யார் எனக்கு மிகவும் வேண்டியவர்கள்? ஆகவே, நான் யார் பேச்சைக்கேட்க வேண்டும்? எவை உண்மையிலேயே முக்கியமான வேலைகள்? நான் முதலில் எதைச்செய்ய வேண்டும்?"
மன்னர் சொன்னதை அந்த சாது கவனமாகக்கேட்டார். ஆனால், பதில் ஒன்றும் சொல்லவில்லை. மீண்டும் கொத்துவதைத் தொடர்ந்தார்.
மன்னர் சொன்னார், " ஐயா! நீங்கள் களைத்து விட்டீர்கள். அந்த மண்வெட்டியைத்தாருங்கள். நான் சிறிது நேரம் கொத்துகிறேன்."
"மிக்க நன்றி" என்று சொல்லி, மண்வெட்டியை மன்னரிடம் கொடுத்து விட்டு அந்த சாது நிலத்தில் அமர்ந்து கொண்டார்.
இரண்டு பாத்திகள் கொத்திய பிறகு மன்னர் அந்தக் கேள்விகளை மீண்டும் சாதுவிடம் கேட்டார். இப்போதும் சாது பதில் சொல்லவில்லை. எழுந்து கைகளை நீட்டி சோம்பல் முறித்து விட்டு, " இப்போது நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்" என்று சொல்லி, மண்வெட்டிக்காகக் கையை நீட்டினார்.
ஆனால், மன்னர் சாதுவிடம் மண்வெட்டியைத் தரவில்லை. தொடர்ந்து கொத்திக்கொண்டிருந்தார். ஒரு மணி நேரம் ஆயிற்று, இரண்டு மணி நேரம் ஆயிற்று, சூரியன் மரங்களுக்கிடையே இறங்கத்தொடங்கினான்.
அப்போது, மண்வெட்டியைக் கீழே போட்ட மன்னர் " ஐயா! நான் என் கேள்விகளுக்கு பதில் தேடி உங்களிடம் வந்தேன். என் கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இல்லையென்றால் சொல்லி விடுங்கள். நான் வீட்டிற்குத் திரும்பிப் போகிறேன்." என்றார்.
" யாரோ ஓடி வருகிறார்கள். யாரென்று பார்ப்போம்" என்றார் சாது.
மன்னர் திரும்பிப்பார்த்தார். தாடியுடன், ஒரு மனிதன் காட்டிலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தான். தன் வயிற்றில் கையை வைத்து அழுத்திக்கொண்டிருந்தான். அங்கிருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. மன்னரை நெருங்கிய அவன் மயங்கிக்கீழே விழுந்து விட்டான். அவன் வாயில் இருந்து வலி மிகுதியால் முனகல் மட்டும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. மன்னரும் சாதுவும், அந்த மனிதனின் உடைகளைத் தளர்த்திப் பார்த்தார்கள். அவனுடைய வயிற்றில் மிகப்பெரிய காயம் இருந்தது. அந்தக் காயத்தை முடிந்த வரை கழுவித் தன் கைக்குட்டையாலும், சாதுவிடம் இருந்த துண்டாலும் இறுக்கக் கட்டினார் மன்னர் . ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை. மீண்டும் மீண்டும் ரத்தத்தால் நனைந்த துணிகளைப்பிழிந்து அலசி, அந்தப் புண்ணைச் சுற்றிக் கட்டிக்கொண்டே இருந்தார் மன்னர் . ஒரு வழியாக ரத்தம் வடிவது நின்றது. அந்த மனிதனுக்கு நினைவு திரும்பியது. 'ஏதாவது குடிக்க வேண்டும்' என்று கேட்டான். மன்னர் , தண்ணீர் கொண்டு வந்து அவனுக்குக்கொடுத்தார்.
இதற்குள், சூரியன் மறைந்து இரவு வந்தது. மன்னரும் சாதுவும் அவனை உள்ளே தூக்கிச்சென்று, படுக்கையில் படுக்க வைத்தனர். அந்த மனிதன் படுக்கையில் படுத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தான். நாள் முழுவதும் செய்த கடின உழைப்பாலும், இந்த காயப்பட்ட மனிதனைப்பார்த்துக் கொண்டதாலும், மிகவும் களைத்திருந்த மன்னர் , அந்தக்குடிசையின் வாசற்படியிலேயே அமர்ந்தபடி அந்த இரவு முழுவதும் தூங்கினார்.
மறு நாள் கண் விழித்த போது, தான் எங்கிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளவே மன்னருக்குச் சிறிது நேரம் ஆயிற்று. படுக்கையில் படுத்துக்கொண்டு, கண்ணீர் பளபளக்கும் கண்களால், அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தாடிக்கார மனிதன் யார் என்று யோசித்தார்.
மன்னர் விழித்துக் கொண்டதைக் கண்ட அந்த மனிதன், " என்னை மன்னித்து விடுங்கள்" என்று பலவீனமான குரலில் வேண்டினான்.
"எனக்கு நீங்கள் யாரென்றே தெரியாதே! நான் உங்களை எதற்கு மன்னிக்க வேண்டும்?" என்றார், மன்னர்.
"உங்களுக்கு என்னைத் தெரியாது; ஆனால், எனக்கு உங்களைத் தெரியும். நான் உங்கள் விரோதி. நீங்கள் என் சகோதரனுக்கு மரண தண்டனை வழங்கி, அவனுடைய சொத்துக்களை அரசுடைமையாக்கிக் கொண்டீர்கள். அப்போதிருந்து உங்களைப்பழி வாங்க வேண்டும் என்று சபதம் செய்திருந்தேன். நீங்கள் இந்த சாதுவைப் பார்ப்பதற்காகத்
தனியே வந்திருக்கிறீர்கள் என்று அறிந்து, நீங்கள் திரும்பிப் போகும் போது உங்களைக் கொல்வதற்காகக் காத்திருந்தேன். நாள் முழுவதும், நீங்கள் திரும்பி வரவில்லை. ஆகவே, நான் மறைந்திருந்த இடத்தில் இருந்து வெளியே வந்தேன். உங்கள் மெய்க்காப்பாளன் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு என்னைத் தாக்கினான். அவனிடமிருந்து தப்பி ஓடி வந்தேன். நீங்கள் மட்டும், என் காயத்துக்குக் கட்டுப் போடாமல் இருந்திருந்தால், நான் நிச்சயம் இறந்திருப்பேன். நான் உங்களைக் கொல்வதற்காக வந்தேன். ஆனால், நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள். நான் இனி வாழ் நாள் முழுவதும், நீங்கள் விரும்பினால், உங்களுக்கு அடிமையாக உழைப்பேன். என் மகன்களையும் உங்களுக்கு சேவகம் செய்ய வைப்பேன். என்னைமன்னியுங்கள்!"
இதைக்கேட்ட மன்னர் மிகவும் மகிழ்ந்தார். ஒரு விரோதி நண்பனானான் என்பதில் அவருக்கு மிகவும் நிம்மதி. அவனுடைய சிகிச்சைக்காக அரண்மனை வைத்தியரை அனுப்பி வைப்பதாகவும், அவனுடைய சகோதரனிடமிருந்து எடுத்துக்கொண்ட சொத்துக்களைத் திரும்பக் கொடுப்பதாகவும் வாக்களித்தார்.
பிறகு, அந்த மனிதனிடமிருந்து விடை பெற்று, அரசர் அந்த சாதுவைத் தேடிக்கொண்டு வீட்டின் முன் புறம் சென்றார். போவதற்கு முன் மீண்டும் ஒரு முறை அவரிடம் தன் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா என்று முயற்சிக்க நினைத்தார்.
வீட்டின் வெளியே, சாது மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, முன் தினம் அமைத்த பாத்திகளில், விதைகளை விதைத்துக் கொண்டிருந்தார்.
மன்னர் அவரை நெருங்கி, " கடைசி முறையாகக்கேட்கிறேன்; தயவு செய்து எனது கேள்விகளுக்கு விடை கூறுங்கள், ஐயா!" என்று வேண்டினார்.
உட்கார்ந்த படியே மன்னரை நிமிர்ந்து பார்த்து சாது சொன்னார், " உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் கொடுக்கப்பட்டுவிட்டனவே!" என்று.
"எப்படி? எப்பொழுது? என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார், மன்னர் .
" உங்களுக்குத் தெரியவில்லையா? நீங்கள் என் மேல் இரக்கப்பட்டு, எனக்கு உதவியாக நிலத்தைக் கொத்தாமல், உங்கள் வழியில் போயிருந்தால், அந்த மனிதன் உங்களைத் தாக்கியிருப்பான். ஆகவே, மிகவும் முக்கியமான நேரம் நேரம் எதுவென்றால், நீங்கள் நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்த நேரம் தான். நான் தான் அப்போதைக்கு மிகவும் முக்கியமான மனிதன். எனக்கு உதவி செய்தது தான் நீங்கள் செய்திருக்க வேண்டிய முக்கியமான வேலை."
" பிறகு, அந்த மனிதன் நம்மை நோக்கி ஓடி வந்த போது, உங்களுக்கு மிகவும் முக்கியமான நேரம், அந்த மனிதனுடைய காயத்துக்குக் கட்டுப்போட்ட நேரம். ஏனென்றால், நீங்கள் அதைச் செய்யாதிருந்திருந்தால் உங்களுடன் சமாதானம் செய்து கொள்ளாமலேயே, அவன் இறந்திருப்பான். ஆகவே, அப்போது, அவன் தான் உங்களுக்கு மிகவும் முக்கியமான மனிதன். அவனுக்காக நீங்கள் செய்த உதவி தான் உங்களுக்கு மிகவும் முக்கியமான செயல்."
ஆகவே, நினைவு வைத்துக்கொள்ளுங்கள்! ஓரே ஒரு நேரம் தான் முக்கியமானது. அது 'இப்பொழுது'. அது ஏன் முக்கியம் என்றால், அப்போது மட்டும் தான், நம்மால் எதையாவது செய்ய முடியும். நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், யாருடன் இருக்கிறோமோ அவர் தான் நமக்கு அப்போதைக்கு மிக முக்கியமான மனிதர். ஏனெனில், எதிர் காலத்தில், வேறு யாருடனாவது நமக்கு சம்பந்தம் இருக்குமா என்று யாருக்கும் தெரியாது. நமக்கு மிகவும் முக்கியமான செயல் எதுவென்றால், நாம் யாருடன் இருக்கிறோமோ, அவருக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்வது. ஏனென்றால், அதற்காகத்தான், நாம் படைக்கப் பட்டிருக்கிறோம்."
அரசருடைய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது. நமக்கும் தான்!
Image: Count Leo Tolstoy
Courtesy: Internet
Image may contain: 1 person, beard and closeup



Sunday 2 August 2020

முகத்தில் ஒரு சிவப்பு வடு -- சாமர்ஸெட் மாம்

சாமர்ஸெட் மாம் (Somerset Maugham)
எழுதிய சிறுகதைகளில் ஒன்று இது. ‘The man with the scar’ என்ற இந்தக்கதை, மேல் நிலை வகுப்பு மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இருந்தது. மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். இந்தக்கதையைப்படித்து முடித்தவுடன் எழுந்த கேள்விகளும், சொல்லப்பட்ட பதில்களும், என் மாணவர்களுக்கும், நினைவில் இருக்கும். பிற மொழி இலக்கியங்களையும் தமிழுக்குக்கொண்டு வரவேண்டும் என்ற ஆசையில், இந்தக்கதையைத்தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன். 90% மூலத்தோடு ஒத்துப்போகும். உங்கள் கருத்துக்களும், யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
முகத்தில் ஒரு சிவப்பு வடு
அந்த மனிதனின் முகத்தில் இருந்த அந்த வடுவைத்தான் நான் முதன்முதலில் கவனித்தேன். நீண்டு, அகன்று, செக்கச்செவேலென்ற அந்த வடு, அவனுடைய நெற்றிப்பொட்டில் இருந்து தாடை வரை இறங்கி, ஒருஅரிவாள் போல் வளைந்து இருந்தது. ஏதாவது பெரிய கத்தியாலோ அல்லது ஏதாவது குண்டு வெடித்து அதன் பகுதிகள் அவன் முகத்தில் பட்டு, பயங்கரமான காயம் ஆகி, அது வடுவாக மாறியிருக்குமோ? அந்த வட்டமான, பூசினாற்போன்ற, நட்பு நிறைந்த முகத்தில், அதை எதிர்பார்க்கவே முடியாது தான். மற்றபடி அவனுடைய முகத்தில் குறிப்பிடும் படியாக எதுவும் இல்லை. சாதாரணத்துக்கும் அதிகமான உயரத்துடன், வலிமை நிறைந்த அவனுடைய உடலமைப்புக்கு, அந்த முகம் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றே சொல்லலாம்.
அவன் எப்போதும் ஒரு கசங்கிய சாம்பல் நிற சூட்டும், காக்கி சட்டையும், கிழிந்த அகன்ற தொப்பியும், அணிந்திருந்தான். ஒவ்வொரு நாளும், குவாடமாலாவில் இருந்த அந்த பாலஸ் ஹோட்டலுக்கு, காக்டெயில் அருந்தும் நேரத்தில் வந்து, நிதானமாக ஒவ்வொரு மேஜையாகப்போய், லாட்டரி சீட்டுகளை விற்க முயல்வான். இப்படித்தான் அவன் சம்பாதித்தான் என்றால், அவன் மிகவும் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், நான் பார்த்தவரை, யாருமே, அவனிடம் லாட்டரி சீட்டுகளை வாங்கியதில்லை. ஆனால், சிலர், அவனுக்கு, ஏதாவது குடிக்க வாங்கிக்கொடுப்பார்கள். அவன் எப்போதும் அதை மறுத்ததில்லை. நீண்ட தூரங்கள் நடந்து பழகியவன் போல், அந்த மேஜைகளிடையே நடந்து, அங்கே அமர்ந்திருப்பவர்களிடம் தன்னிடம் இருந்த லாட்டரிச் சீட்டுகளின் எண்களைச்சொல்லி, “வாங்கிக்கொள்கிறீர்களா?” என்று கேட்பான். 'வேண்டாம்' என்றால், ஒரு புன்னகையுடன் அடுத்த மேஜைக்கு நகர்ந்து விடுவான்.
ஒரு நாள் நான் என் நண்பன் ஒருவனுடன் அந்த பாலஸ் ஹோட்டலில் பாருக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த சிவப்பு வடுவுள்ள மனிதன், உள்ளே நுழைந்தான்.
என்னிடம் லாட்டரி சீட்டுகளை அவன் காட்டிய போது, நான் 'வேண்டாம்' என்று தலையசைத்தேன். ஆனால், என் நண்பன் அவனைப்பார்த்து, நட்புடன் தலையாட்டியது மட்டுமன்றி," ஹலோ ஜெனரல்! எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டான்.
அதற்கு அவன்," வியாபாரம் நன்றாக இல்லை தான். ஆனால், நிலைமை இதை விட கூட மோசமாக இருக்கலாமில்லயா?" என்றான்.
அடுத்து, என் நண்பன், " என்ன சாப்பிடுகிறீர்கள், ஜெனரல்?" என்று கேட்டான்.
'ஒரு ப்ராண்டி" என்றான் அவன். அது வந்ததும், அதை ஒரே மூச்சில் குடித்து விட்டு, கிளாஸை மேஜை மேல் வைத்து விட்டு, "தாங்க்ஸ். பின்னர் பார்க்கலாம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பி, அருகில் இருந்த மற்றவர்களிடம் லாட்டரி சீட்டுகளைக் காட்ட ஆரம்பித்தான்.
அவன் சற்று தூரம் சென்ற பின்னர், என் நண்பனிடம், "யாரப்பா அந்த உன் நண்பன்? அவன் முகத்தில், பயங்கரமான வடு இருக்கிறதே!" என்றேன்.
என் நண்பன் சொன்னான்:
"அவன் நிகாராகுவாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவன். முரடன் தான்; கொள்ளைக்காரன் தான்; ஆனால், மோசமானவன் இல்லை. புரட்சியாளர்களின் தலைவனாக இருந்தான். அவனிடம் இருந்த வெடி மருந்துகள் மட்டும் தீர்ந்து போயிருக்காவிட்டால், அவன் தன் நாட்டின் அரசாங்கத்தைக் கவிழ்த்து விட்டு, புதிய அரசாங்கத்தின் போர் அமைச்சர் ஆகி இருப்பான். இப்படி குவாட்டமாலாவில் ஒரு ஹோட்டலில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருக்க மாட்டான்.
அவனையும், அவனுடைய சகாக்களையும் பிடித்து கோர்ட் மார்ஷல் செய்தார்கள். மறு நாள் காலையில் அவர்கள் அனைவரையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என்று தீர்ப்பு ஆயிற்று. இரவு முழுதும் அவன் லாக் அப்பில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தான்.
மறு நாள் காலையில், படைவீரர்கள், அவனையும், அவனது சகாக்களையும் வந்து அழைத்துச் சென்றார்கள். ஒரு சுவற்றின் முன் அவர்கள் ஐந்து பேரையும் வரிசையாக நிற்க வைத்தார்கள். அவர்களின் எதிரே, அவர்களைச் சுடுவதற்குப் படை வீரர்கள் துப்பாக்கியுடன் தயாராக நின்றிருந்தார்கள்.
சிறிது நேரம் கழிந்தது. அவன் பொறுமையிழந்து, “எதற்காக எங்களைக் காக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கத்தினான்.
“அரசின் படைத்தளபதி உங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் படுவதைப் பார்க்க விரும்புகிறார். அவருடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்ற பதில் வந்தது.
“அப்படியென்றால், எனக்கு இன்னும் ஒரு சிகரெட் பிடிப்பதற்கு நேரம் இருக்கிறது. அவர் எப்போதுமே நேரத்தை மதிப்பவர் இல்லை” என்று சொல்லி, அவன் சிகரெட்டைப்பற்ற வைக்கவும், தன் உதவி அலுவலர்களுடன் அரசின் படைத்தளபதி ( அவர் பெயர் ஸான் டியாகோ. நீங்கள் அவரைச் சந்தித்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை) அங்கே வந்து சேரவும், சரியாக இருந்தது.
வழக்கமான சம்பிரதாயங்களுக்குப்பின்னர், அவர் தண்டனைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர்களைக் கேட்டார், “ உங்களுக்கு ஏதாவது கடைசி ஆசை இருக்கிறதா?”
மற்ற நால்வரும் இல்லை என்று தலையசைத்தார்கள்.
ஆனால், நம் நண்பன் வாயைத்திறந்தான், “ ஆமாம்! நான் என் மனைவியிடம் விடை பெற விரும்புகிறேன்.”
“சரி!” எனக்கு அதில் ஆட்சேபணை ஒன்றும் இல்லை. உங்கள் மனைவி எங்கிருக்கிறார்?
“இந்த சிறை வாசலிலேயே காத்துக்கொண்டிருக்கிறார்.”
“அப்படியென்றால், ஒரு ஐந்து நிமிடம் தான் தாமதம் ஆகும்”
“அது கூட ஆகாது, ஜெனரல்”.
“அவரைத் தனியாக அழைத்துச்செல்லுங்கள்” என்று அந்தத் தளபதி உத்தரவிடவும், இரண்டு படைவீரர்கள் அவரை அழைத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினார்கள்.
பின்னர் தளபதி தலையசைத்தவுடன், அந்த நான்கு பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொருவராகக் கீழே விழுந்து, துடித்து, அடங்கினார்கள்
நம் நண்பன், ஒரு சிகரெட்டை, புகைத்து விட்டு, மீதமிருந்த துண்டை வீசி எறிந்தான்.
வாசலில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பெண் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு, அவசர அவசரமாக உள்ளே ஓடி வந்தாள். நம் நண்பனைப் பார்த்தவுடன், திடீரென்று நினறாள். ஓ வென்று கத்திக்கொண்டு கைகளை நீட்டிக்கொண்டு, முன்னால் ஓடினாள்.
அவள் கருப்பு உடையணிந்திருந்தாள். தலைக்கு மேல் முக்காடிட்டிருந்தாள். அவள் முகம் சுண்ணாம்பு போல் வெளுத்திருந்தது.
அவள் சிறிய பெண்ணாக இருந்தாள். அழகான முகத்தில் மிகப்பெரிய கண்களுடன். ஆனால், அவை வேதனையால் நிரம்பி இருந்தன.
சற்றே திறந்த வாயுடன், துன்பம் மேலிட்டு அவள் அவனை நோக்கி ஓடிய போது எதற்கும் அசராத அந்தப்படை வீரர்களைக் கூட அவளுடைய பேரழகு அதிர்ச்சி அடையச்செய்தது.
நம் நண்பன் ஓரிரு அடிகள் அவளை நோக்கி நடந்து வந்தான். இவள் பாய்ந்து சென்று அவனைத் தழுவிக்கொண்டாள்.
“என் இதயத்தின் ஆத்மாவே!” என்று சொல்லிக்கொண்டே, அவன் அவளுடைய இதழ்களில், மென்மையாக முத்தமிட்டான். அதே நேரம், தனது முரட்டு சட்டையில் இருந்து ஒரு கத்தியை எடுத்து (அவனிடம் கத்தி எப்படி வந்தது என்று புரியவில்லை) அவளுடைய கழுத்தில் குத்தினான். அறுபட்ட இரத்தக் குழாயில் இருந்து பொங்கிய ரத்தம் அவனுடைய சட்டையை நனைத்தது. அவன் மீண்டும் அவளை ஆரத்தழுவி, அவளுடைய இதழ்களில் முத்தமிட்டான்.
இதெல்லாம் கண நேரத்தில் நடந்து விட்டது. என்ன நடந்தது என்று புரிந்த போது அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் கூக்குரலிட்டார்கள். பாய்ந்து சென்று அவனைப் பிடித்தார்கள். அவன் கை விட்டவுடன், அந்தப்பெண் கீழே விழுந்திருப்பாள், நல்ல வேளை, ஒரு துணை அதிகாரி அவளைப் பிடித்துக்கொண்டார். அவள் நினைவிழந்திருந்தாள். அவளைக்கீழே கிடத்திக் கவலையுடன் மற்றவர்கள் அவளைச்சூழ்ந்து கொண்டார்கள்.
“அவள் இறந்து விட்டாள்” என்றார் அந்த அதிகாரி.
நம் நண்பன் சிலுவைக்குறி இட்டுக்கொண்டான்.
“ஏன் அப்படிச்செய்தாய்?” என்று கேட்டார் அரசின் தளபதி
”நான் அவளை மிகவும் நேசித்தேன்.” என்றான், அவன்.
அங்கிருந்தவர்களிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது. அவனை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவனையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த தளபதி சொன்னார்,
“நீங்கள் செய்தது மிகவும் மேன்மையான செய்கை! “
மீண்டும் சொன்னார், “என்னால் இவருக்கு மரண தண்டனை வழங்க முடியாது. என்னுடைய காரை எடுத்துக்கொண்டு, இவரை அழைத்துக்கொண்டு போய், எல்லையில் விட்டுவிடுங்கள்."
பின், அவனை நோக்கித்திரும்பி சொன்னார், " ஐயா! ஒரு வீரன் இன்னொரு வீரனுக்கு
வழங்க வேண்டிய மரியாதையை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.”
அங்கிருந்த படைவீரர்களிடமிருந்து அதை ஆமோதிக்கும் ஒலி எழுந்தது.
துணை அதிகாரி, அவன் தோளை மெதுவாகத் தொட்டார். மறு பேச்சின்றி, இரண்டு படைவீரர்களுக்கு மத்தியில், நடந்து காத்திருந்த காரை நோக்கி அவன் நடந்தான்.”
என் நண்பன் சொல்லி முடித்தான். நான் சிறிது நேரம் பேச முடியாமல் அமைதியாக இருந்தேன்.
“அது சரி! அந்த சிவப்பு வடு. அவனுக்கு எப்படி ஏற்பட்டது?”
“ஓ! அதுவா! அது ஏதோ ஒரு ஜிஞ்சர் ஏல் (ஓரு வகை மது) பாட்டிலைத்திறக்கும் போது, அது வெடித்து விட்டது.”
“எனக்கு அதைப்பார்க்கவே பிடிக்கவில்லை” என்றேன், நான்.
Image: W. Somerset Maugham
Courtesy: Internet
,